புதன், 5 ஜூலை, 2017

சுவையான... ஆலு பரோட்டா





சுவையான... ஆலு பரோட்டா


பரோட்டா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 அந்த பரோட்டாவை நாம் இதுவரை ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம்.

 ஆனால் அந்த பரோட்டாவை வீட்டிலேயே எந்த ஒரு சைடு டிஸ்-ம் இல்லாமல் ஈஸியாக, சுவையாக செய்யலாம்.

அது எப்படியென்று படித்து பாருங்களேன்...

*தேவையான பொருட்கள்:*

உருளைக்கிழங்கு - 4

மைதா மாவு - 4 கப்

பச்சைமிளகாய் - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்


மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

கரம்மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்

சோம்புத்தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

*செய்முறை:*

ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, மாவை மூடி வைத்து ஊற விடவும்.

பின் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் உருளைக் கிழங்கு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து, உருளைக் கிழங்கின் தோலை உரித்துவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

பின் அந்த மசித்த உருளைக்கிழங்கில் சீரகத்தூள், மசாலாத் தூள், மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா பொடி, சோம்புத்தூள், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும். பின் அதோடு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை போட்டு நன்கு கிளறவும்.

 மசாலா வாசனை போகும் வரை கிளறி, பின்னர் இறக்கி வைத்து ஆறவிடவும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு, மைதா மாவில் லேசாக தேய்த்து, பின் வட்டமாக சப்பாத்திப் போல் தேய்க்கவும். அதன் மத்தியில் ஒரு ஸ்பூன் உருளை மசாலாவை வைக்கவும்.

பின் அதன் ஓரங்களை மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும்.

பிறகு அதனை எடுத்து வெறும் மைதா மாவில் தேய்த்து, மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்.

 இவ்வாறு செய்யும் போது மிகவும் கவனமாக தேய்க்க வேண்டும்.

அழுத்தி தேய்த்தால் உள்ளே வைத்துள்ள மசாலா வெளியில் வந்துவிடும்.

இதே போல் அனைத்து உருண்டைகளையும் பரோட்டா போல் செய்யவும்.

பின்னர் அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களில் ஒன்றை எடுத்துப் போட்டு, தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும்.

 இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

இவ்வாறு அனைத்து பரோட்டாக்களையும் வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான ஆலு பரோட்டா ரெடி!!!

*குறிப்பு:*

 இதனை கோதுமை மாவிலும் செய்யலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக