குழம்பு மிளகாய் மசால் பொடி..
*தேவையான பொருட்கள்:*
கொத்தமல்லி – 500 கிராம்
மிளகாய் வத்தல் – 500 கிராம்
சீரகம் – 250 கிராம்
சோம்பு – 50 கிராம்
மிளகு – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
அரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
துவரம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 200 கிராம்
பெருங்காயத்தூள் – 25 கிராம்
மஞ்சள்தூள் – 100 கிராம்
கறிவேப்பிலை – 50 கிராம்
எண்ணெய் – சிறிது
*செய்முறை:*
கொத்தமல்லியை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
மிளகாய் வத்தலை காம்பு கிள்ளி காயவைத்து எண்ணையின்றி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சீரகம், சோம்பு, மிளகை ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
(லேசாக பொரிந்தபின் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்).
பின்பு கடுகையும், வெந்தயத்தையும் போட்டு அதே போல் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
(வெந்தயமும், கடுகும் லேசாக பொரியும் வரை வறுத்தால் போதுமானது).
அரிசியை எண்ணெய் விடாமல் லேசாக பொரியும் வரை வறுக்கவும்.
உளுந்தையும் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
பெருங்காயத்தையும், கறிவேப்பிலையையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
(கறிவேப்பிலை மொறு மொறுவென ஒடிக்க வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும்).
கடைசியாக மஞ்சள்தூளையும் எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதுவரை வறுத்த எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.
ஆறியபின் மிஷினில் கொடுத்து திரித்து வாங்கவும்.
இந்த மசால் பொடியை ஆறவைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளவும்.
*இது*
*புளிக்குழம்பு,*
*மீன் குழம்பு,*
*மட்டன் குழம்பு,*
*காரக் குழம்பு*
*என எல்லாவற்றுக்கும் ஏற்ற குழம்பு மசால் பொடி.*
நல்ல வாசனையுடன், ருசியாக இருக்கும்.
அரிசி – பொன்னி புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி பயன்படுத்திச் செய்ய சுவையாக இருக்கும்.
வறுப்பதற்கு முன் கல் பார்த்துக் கொள்ளவும்.
வறுக்கும் போது குறைவான எண்ணெய் சேர்க்க மசால் பொடி வருடக் கணக்கில் கெடாமல் இருக்கும்.
வறுக்கும் போது வறுபடும் பொருட்கள் கருகி விடாமல் மிதமான தணலில் வறுப்பது அவசியம்.
அப்பொழுதுதான் மசால் பொடியின் நிறமும், சுவைவும் குறையாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக