வியாழன், 26 ஜனவரி, 2017

கீரை சாதம்

கீரை சாதம் 

தேவையான பொருள்கள்:
1. முளைக்கீரை = 1 கட்டு
2. அரிசி = 250 கிராம்
3. ஏலக்காய் = 4
4. கிராம்பு = 3
5. பட்டை = சிறிதளவு
6. கொத்தமல்லி = 2 ஸ்பூன்
7. துவரம் பருப்பு = 100 கிராம்
8. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
9. கடலை பருப்பு = 1 ஸ்பூன்
10. பச்சை மிளகாய் = 3
11. பூண்டு = 5 பல்
12. வற்றல் = 2
13. கடுகு = 1 ஸபூன்
14. நெய் = தேவையான அளவு
15. உப்பு = தேவையான அளவு
16. கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

• முளைக்கீரையை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி நீரில் ஊற வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும். ஏலக்காய், கிராம்பு, பட்டை, கொத்தமல்லி,  கடலை பருப்பு ஆகியவற்றை வாணலியில் போட்டு இளஞ்சிவப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• குக்கரில் தேவையான அளவு நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

• பிறகு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, வற்றல் போட்டு கிளறி வறுத்த பொடியை சேர்த்து வதக்கி பொடி வாசனை போனதும் கீரையை சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, தேவையான அளவு  உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீரி விட்டு குக்கரை மூடி வைத்து விசில் வைத்து வேக விட்டு எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான  மற்றும் ஆரோக்கியமான உடனடி கீரை சாதம் தயார்.

மருத்துவ குணங்கள்:

• முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 2.7 விழுக்காடு தாது உப்பும், ஒரு விழுக்காடு நார்ச்சத்தும், 6.3 விழுக்காடு மாவுச்சத்தும் நிறைந்துள்ளன. இக்கீரை 46 கிலோ சக்தியைக் கொடுக்கக் கூடியது.

• நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச்சத்தும் 61 மில்லி கிராம் கந்தகச்சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.

• இந்த கீரைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச்சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மூளை வளர்ச்சிக்கு இம்முளைக்கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பெரிதும் உதவுகின்றது.

• இந்த கீரை சாதம் நாவுக்கு உருசியை கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்க கூடியது. உட்சூடு, ரத்தக்கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக