வெள்ளி, 8 டிசம்பர், 2017

மார்கழி மாத ஸ்பெஷல் உணவுகள்...



மார்கழி மாத ஸ்பெஷல் உணவுகள்...

சர்க்கரைப் பொங்கல்...

தேவையானவை: அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், பொடித்த வெல்லம் – 4 கப், நெய் – ஒரு கரண்டி, முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய் – 2.

செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். இதை அரிசியுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு களைந்து எடுத்து… பிறகு 7 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, பிறகு பாகு காய்ச்சவும். தக்காளி பதம் வருவதற்கு சற்று முன் வேக வைத்த அரிசி – பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும் (மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும்). பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.

எள்  சுக்கு சாதம்

தேவையானவை: அரிசி – 2 கப், எள் – 2 டீஸ்பூன், சுக்கு – ஒரு சிறிய துண்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசியை உதிர் உதி ரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். எள்ளை கடாயில் வறுத்து தனியாக வைக்கவும். சுக்கை தட்டி பொடி செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, சுக்குப் பொடி, சாதம் சேர்த்துக் கிளறி… எள் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

வெண் பொங்கல்

தேவையானவை: அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு, சீரகம் – தலா  2 டீஸ்பூன்,  நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு களைந்து எடுத்து, 7 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த அரிசி – பருப்பு கலவையை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

திருவாதிரை கூட்டு

தேவையானவை: நறுக்கிய பூசணிக்காய், பரங்கிக்காய், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, சௌசௌ, உருளைக்கிழங்கு (சேர்த்து) – 2 கப்,  வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, வேக வைத்த கொண்டைக் கடலை – அரை கப், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.


செய்முறை: காய்களை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த விழுது துவரம்பருப்பு, கொண்டைக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு சேர்த்து, காய்களை சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

உளுந்தோரை

தேவையானவை:  உளுந்து – அரை கப், அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய்  – 3, மிளகு – 4, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, உளுந்து பொடியையும், சாதத்தையும் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

மிளகோரை

தேவையானவை: அரிசி – ஒரு கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு இரண்டையும் வறுத்து, பொடி செய்து வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு கடுகு, மீதியுள்ள உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளித்து… செய்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சாதத்தை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இதை வேர்க்கடலை சேர்க்காமலும் செய்யலாம்.

கதம்ப சாதம்

தேவையானவை: அரிசி – 2 கப், துவரம் பருப்பு – ஒரு கப், கேரட் – ஒன்று (நறுக் கவும்), பூசணிக்காய், பரங்கிக்காய் – தலா ஒரு கீற்று (நறுக்கவும்), நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பீன்ஸ், கத்திரிக்காய், சௌசௌ, பச்சைப் பட்டாணி (சேர்த்து) – 2 கப், தனியா – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத் தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந் தயம் –  ஒரு டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, புளிக்கரைசல் – ஒரு கப்,  தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 8, வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பை குக் கரில் தனித் தனியாக வேக வைக்கவும். நறுக்கிய காய்களை தனியாக வேக வைக்க வும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக  அரைத்து வைக்கவும். அடிகனமான கடாயில் பருப்பு, காய்கள், புளிக்கரைசல், அரைத்து வைத்த விழுது, உப்பு… எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பிறகு சாதம் சேர்க்கவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வேர்க்கடலை ஆகியவற்றை எண்ணெயில் தாளித்து சேர்த்து… நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கசகசா  வெள்ளரி விதை சாதம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், கசகசா, வெள்ளரி விதை – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். கச கசாவை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலி யில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… வெள்ளரி விதையை சேர்த்து, சாதத்தையும் சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்துக் கலக்கி, இறக்கவும்.

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுந்து – ஒன்றரை கப், மிளகு, சீரகம், சுக்குப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள், கறிவேப்பிலை – சிறி தளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து… உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு, கொரகொரப் பாக (ரவை போல்) அரைத்து, இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.  மாவு நன்றாக பொங்கியதும், கடாயில் எண்ணெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம், சுக்குப் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, மாவில் சேர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். (சுமார் 15 நிமிடம்). பிறகு, தட்டில் கவிழ்த்துப் போட்டு ‘கட்’ செய்து பரிமாறவும். மாவை எண்ணெய் தடவிய சிறிய கப்களில் ஊற்றியும் ஆவியில் வேக வைக்கலாம்.

புளி அவல்

தேவையானவை: கெட்டி அவல் – ஒரு கப், புளிக்கரைசல் – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, கறிவேப்பிலை – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலைக் கழுவி புளிக்கரைசலில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து அவலுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் அப்ப டியே வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க் கடலை, கறிவேப்பிலை தாளித்து, அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.

தத்யோன்னம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, தயிர் – ஒரு கப், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் குழை வான சாதமாக வடித்துக் கொள்ள வும். சாதத்தை  நன்றாக கரண்டியால் மசித்து ஆறவிடவும். தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். சாதம் ஆறியதும், அதனுடன் தயிர் சேர்க்கவும். பிறகு நெய்யில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனுடன் மாதுளம் முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்தும் பரிமாறலாம்.

கல்கண்டு பாத்

தேவையானவை: அரிசி – ஒரு கப், பால் – 3 கப், கல்கண்டு – ஒன்றரை கப், நெய் – ஒரு கப், முந்திரி – சிறிதளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, திராட்சை, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பச்சைக் கற்பூரம் – கடுகளவு.

செய்முறை: அரிசியைப் பால் விட்டு குக்கரில் குழைவாக வேக வைக்கவும். கல்கண்டை தேவையான நீர் சேர்த்து பாகு வைக்கவும். கம்பி பதம் வந்ததும் குழைந்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து (நெய்யையையும் சேர்க்கவும்), கிளறி இறக்கவும்.

திருவாதிரை களி

தேவையானவை: அரிசி – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், தண்ணீர் – இரண்டரை கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும்.  கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.

திருப்புல்லாணி பாயசம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் – அரை மூடி, பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 2.

செய்முறை: அரிசியை வறுத்து, ஒரு கப் அரிசிக்கு 3 கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும் (ரொம்ப குழையக் கூடாது). தேங்காயை துருவி… முதல் பால் எடுத்து தனியாக வைக்கவும். பிறகு, இரண்டாவது பால் எடுக்கவும். வெந்த சாதத்தில் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, இரண்டாவது தேங்காய்ப் பாலை விட்டு கொதிக்கவிடவும். கடைசியில், முதல் தேங்காய் பாலை விட்டு, 2 நிமிடம் வைத்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

கோயில் புளியோதரை

தேவையானவை:  அரிசி – 2 டம்ளர், புளி – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), கடுகு – 2 டீஸ்பூன்,  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசியைத் தண்ணீரில் களைந்து எடுத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள்தூள், 4 டம்ளர் நீர் சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும். தட்டில் சாதத்தை ஆற வைக்கவும். வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, மிளகை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு… மீதமுள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… புளிக்கரைசலை சேர்த்து உப்பு, வெல்லம் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறியதும் சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக