மூங்கில் பிரியாணி
*தேவையானவை:*
பாஸ்மதி அரிசி - 200 கிராம்
மூங்கில் குழல் - அரை அங்குல நீளம் கொண்டது (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - 1 பீஸ்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டுக் கலவை - ஒன்றரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம் (நீளமாக நறுக்கவும்)
முந்திரி, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - - அரை டேபிள்ஸ்பூன்
மீடியம் சைஸ் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - 200 கிராம்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
*செய்முறை:*
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) பழம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளியை இதில் சேர்த்து, நன்கு மசியும் வரை வதக்கவும்.
காய்கறி மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை புதினா இலைகளைச் சேர்த்து நன்குக் கிளறவும்.
பிறகு கழுவிய அரிசியைச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக விடவும்.
பிரியாணி அரைவேக்காடு வெந்ததும் அதை அப்படியே எடுத்து, மூங்கில் கட்டையின் உள்ளே எவ்வளவு நிரப்ப முடியுமோ அவ்வளவு நிரப்பவும்.
வாய்ப்பகுதியை ஒரு சிறிய சுட்ட சப்பாத்தியை வைத்து மூடவும்.
சப்பாத்தியை மூடும்படியான ஒரு வாழை இலையை எடுத்து மூடி அப்படியே மூங்கில் கம்போடு வாழை இலையைச் சேர்த்து இறுக்கக் கயிற்றால் கட்டவும்.
அப்போதுதான் உள்ளே இருக்கும் பிரியாணி வெளியே வராது.
*இந்த மூங்கில் கட்டையை நேரடியாக தீயில் இருபது நிமிடம் காட்டி எடுத்தால் அற்புதமான மூங்கில் பிரியாணி ரெடி.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக