சப்பாத்திக்கு அருமையான பேபிகார்ன் கிரேவி
நாண், புல்கா, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபிகார்ன் கிரேவி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபிகார்ன் - கால் கிலோ,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெரிய தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப,
தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக