கோவில் புளியோதரை
தேவையான பொருட்கள்
புளி ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி,
உப்பு தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க
காய்ந்த மிளகாய் 7,
கடலை பருப்பு 2 தேக்கரண்டி,
தனியா 2 தேக்கரண்டி,
வெந்தயம் 1/2 தேக்கரண்டி,
எள் 1 மேசைக்கரண்டி.
தாளிக்க
கடுகு 1 தேக்கரண்டி,
கடலை பருப்பு 1 தேக்கரண்டி,
வறுத்து தோல்
நீக்கிய வேர்க்கடலை கைப்பிடி,
பெருங்காயம் சிறிது,
காய்ந்த மிளகாய் 7,
கறிவேப்பிலை சிறிது,
முந்திரிப்பருப்பு 10
எண்ணெய் 4 மேசைக்கரண்டி.
சாதம் கலக்க
சாதம் 4 கப்,
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்.
செய்முறை
புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும் (எள்ளை கடாயில் போட்டு படபடவென பொரிந்ததும் எடுக்கவும்). மிளகாயை மூன்று பாகங்களாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும். கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொடித்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்ணெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக் காய்ச்சல், மீதியுள்ள பொடியைச் சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக