தக்காளி சாதம் - முதல் வகை
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டுப்பற்கள் - 4
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.
முழு தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த தக்காளிச் சாற்றுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 4 கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும்.
விருப்பப்பட்டால், கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கலாம்.
வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி
ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.
*சமையல் டிப்ஸ்*
*தக்காளி சாதம் - இரண்டாம் வகை*
இந்த சாதம், பூண்டு, வெங்காயம் சேர்க்காமல், அதிக காரமில்லாமல், விரைவில் செய்யக்கூடிய ஒன்று. விரதம் மற்றும் பண்டிகை நாட்களுக்கு ஏற்றது.
தேவையானப்பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
நெய் அல்லது எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.
ஒரு சிறு வாணலியில் நெய் அல்லது எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.
சூடாக அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக