உணவுப் பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
*1.* ஓர் உணவுப் பொருளை வாங்குவதற்கு முன், அதில் தயாரிப்பின்போது சேர்க்கப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். நிறமூட்டிகள், சர்க்கரை, பதனிடும் பொருட்களின் பயன்பாடு அதிகம் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எதிரான அந்தப் பொருளை தவிர்த்துவிட வேண்டும். சில பொருட்களை சுவைத்துப் பார்க்க அனுமதி இருந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
*2.* கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் என அவரவரின் ஊட்டச்சத்து தேவைக்கு ஏற்ப உணவு வாங்க, உணவுப் பொருளின் உறையில் உள்ள சத்து அட்டவணையை கவனித்து வாங்கவும்.
*3.* ஒரு பொருளின் உறையில், உற்பத்தியாளரின் முகவரி, தொடர்பு எண் பற்றிய விவரங்களை கவனித்து வாங்கும்போது, பாக்கெட்டில் 'செட்டிநாடு முறுக்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தயாராகி வருகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தப் பொருள் குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க, தொடர்பு எண் பயன்படும். முகவரி, தொடர்பு எண் இல்லாத பொருட்களை வாங்காமல் தவிர்ப்பது நலம்.
*4.* நுகர்வோரை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும் என்பதை. இவ்விரண்டில் ஏதேனும் குளறுபடி இருந்தால், உடனடியாக கடைக்காரர், அங்காடி நிர்வாகியிடம் அது குறித்து புகார் தெரிவித்து அதை அப்புறப்படுத்தச் சொல்லவும்.
*5.* காலாவதி தேதி குறித்து கடைக்காரரிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை இல்லை எனில், அந்த உணவுப் பொருளின் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொலைபேசி, ஈமெயிலில் புகார் அளிக்கவும். பதில் நடவடிக்கை இல்லாத பட்சத்தில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகி முறையிடலாம். இதற்கு, குறிப்பிட்ட பொருள் வாங்கிய ரசீது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, உறையில் குறிப்பிடப்பட்டிருந்த காலாவதி தேதியையும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*6.* பிரெட், பால், சப்பாத்தி, பரோட்டா போன்ற 'ரெடி டு ஈட்' பொருட்களில் 'பெஸ்ட் பிஃபோர்(Best before)' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியையும் சரிபார்த்து வாங்கவும்.
*7.* வாங்கும் உணவுப் பொருள் சைவமா, அசைவமா என்பது அதன் உறையிலேயே குறியீடு அல்லது வார்த்தைகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து வாங்கவும்.
*8.* தரச்சான்று முத்திரை பெற்ற உணவுப் பொருட்களையே வாங்கவும். உதாரணமாக நெய் என்றால் அக்மார்க் முத்திரையும், பால், குடிநீர் எனில் ஐ.எஸ்.ஐ. முத்திரையும் இருக்க வேண்டும்.
*9.* ஒரு பொருளை வாங்கும்போது, அதை எவ்வாறு, எந்த குளிர்/வெப்ப நிலையில் வைக்கவேண்டும் என்பதை தெரிந்துகொண்டு பின்பற்றவும்.
*10.* ஒரு பொருளின் தரம் குறித்து புகார் அளிக்க, முறையான சான்று வேண்டும் என்பதால், எப்போதும் பேக் செய்யப்பட்ட, லேபிள்டு மற்றும் பிராண்டட் பொருட்களையே வாங்கவும்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக