புதன், 15 நவம்பர், 2017

மதுரை மண்சட்டி மீன் குழம்பு..


 மதுரை மண்சட்டி மீன் குழம்பு..


இதற்கு செக்குல ஆட்டிய நல்லெண்ணெய் , சின்ன வெங்காயம், அம்மியில் நசுக்கிய நாட்டு பூண்டு , கெட்டியான

 தேங்காய் பால் (முற்றின தேங்காய் ) பயன்படுத்தவும், காஷ்மீர் மிளகாய் தூள் இதை எல்லாம் பயன்படுதினால் தான் குழம்பின் அசல் சுவை கிடைக்கும்.

இதற்கு கடல் கொடுவா, கடல் நெத்திலி,  ஆற்று மூக்கு மீன், கடல் அயிலை மீன்கள், டேம் கெழுத்தி, டேம் ஜிலேபி மீன்களையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் #

மத்தி மீன் 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு பற்கள் 12 ( அம்மியில் நசுக்கியது )
கடுகு 3/4 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க #

புளி 1 எலுமிச்சை அளவு
தேங்காய் பால் 2 கப்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு தேவையான அளவு


செய்முறை #


1. மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மஞ்சள்தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. புளியை சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை எடுக்கவும்.

3. மண்சட்டியை அடுப்புல வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும், அதில் சீரகம் சேர்த்து

 நன்கு பொரிந்ததும். அதில் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

 அதில் அம்மியில் நசுக்கிய வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக கூழ் போல் ஆனதும்.

6. சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் பால் மற்றும் புளித் தண்ணீர் மிளகாய் தூள், கொத்தமல்லி

 தூள், மஞ்சள்தூள், மிளகு தூள், மற்றும் தேவையான அளவு கல் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7. இப்பொழுது இந்த கரைத்த கரைசலை தேவை பட்டால் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை மண்சட்டியில் ஊற்ற வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்து

 பச்சை வாசனை போனதும் அதில் மீன் துண்டங்களை போட்டு கிளறாமல் சிறு தீயில் 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

8. இந்த சமையலை நாம் முதல் நாள் இரவே சமைத்து மூடி வைத்து விட வேண்டும். பிறகு காலையில் ஒரு கிளறு கிளறி மறுபடியும் ஒரு 5 நிமிடம் சிறு தீயில்

 கொதிக்க வைக்கவும். பிறகென்ன சுடு சாதத்துடன் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக