திங்கள், 16 செப்டம்பர், 2019

30 வகை இனிப்பு கார உருண்டை


#30_வகை_இனிப்பு_கார_உருண்டை

 *பாதாம்  திராட்சை உருண்டை*

தேவையானவை: வறுத்த பாதாம் – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, உலர் திராட்சை – 10 முதல் 15.

செய்முறை:  அடி கனமான வாணலி (அ) நான்ஸ்டிக் கடாயில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.  அதனு டன் நெய், ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த பாதாம் சேர்த்து… கை பொறுக்கும் சூட்டில் உருண்டை கள் பிடிக்கவும்.

குறிப்பு: சிறிதளவு வெல்லப் பாகை எடுத்து தண்ணீரில் போட்டு… கட்டைவிரல் மற் றும் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி எடுக்கும்போது, கையில் ஒட்டாமல் நன்கு உருட்ட வந்தால்… அதுதான் சரியான உருண்டை பாகு பதம்.

 *ரவா மாலாடு*

தேவையானவை: மெஷினில் அரைத்த ரவை – ஒரு கப், பொடித்த சர்க்கரை – அரை கப், வறுத்த முந்திரி – திராட்சை – சிறிதளவு, ஜாதிக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை, நெய் அல்லது வனஸ் பதி- முக்கால் கப், பச்சைக் கற்பூரம் – மிளகு அளவு.

செய்முறை:  பொடித்த ரவை, சர்க்கரை, வறுத்த முந்திரி – திராட்சை, ஜாதிக் காய்த்தூள், பொடித்த பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலக்கி, உருக்கிய நெய்/வனஸ்பதி விட்டு (அதிகம் காய்ச்சக் கூடாது),  விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

 *முந்திரி உருண்டை*

தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  காடாயில் நெய் விட்டு, முந்திரியை லேசாக சிவக்கும்படி வறுத்து, நன்கு ஆறவிடவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளை ஒன்றுசேர்த்து அதன் மீது பாகை கொட்டி கலந்து,  கைகளில் நெய் தடவி, உருண்டைகளாக பிடிக்கவும்.

 *பொட்டுக்கடலை மாலாடு*

தேவையானவை: பொட்டுக் கடலை – 200 கிராம் (மாவாக் கவும்), பொடித்த சர்க்கரை – 100 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை (சேர்த்து) – 25 கிராம், உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி – 150 கிராம், மில்க் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:  ஒரு பேஸினில் பொட்டுக்கடலை மாவு, மில்க் பவுடர், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய் (அ) வனஸ்பதியை சூடாகச் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *கைக்குத்தல் அவல் உருண்டை*

தேவையானவை: சிவப்பு கைக்குத்தல் அவல் – ஒரு கப், பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் – முக்கால் கப், வெண்ணெய் – அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா 50 கிராம்.

செய்முறை:  நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில்  சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

 *கடலை மாவு லாடு*

தேவையானவை: தரமான கடலை மாவு – 2 கப், பொடித்த சர்க்கரை – ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 150 கிராம், வறுத்த முந்திரி – திராட்சை – சிறிதளவு.

செய்முறை:  வாணலியில் நெய்யை சூடாக்கி, கடலை மாவை பச்சை வாசனை போக சிவக்க வறுத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சூட்டில் சர்க்கரை இளகி, மாவு கலவை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது, உருண்டைகள் பிடிக்கவும்.

பின்குறிப்பு: மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருண்டை ருசிக்காது.

 *டேட்ஸ்  கொப்பரை உருண்டை*

தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை – அரை கப், வெனிலா எசன்ஸ் – சில துளிகள், நெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:  பேரீச்சம்பழத்தில் சரிபாதி எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும் (அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை டீஸ்பூன் நெய்யை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும்) உருண்டைகள் பிடித்தால்… கிராண்டான டேட்ஸ் – கொப்பரை உருண்டை அதிக செலவின்றி வீட்டிலேயே தயார்!

 *பாசிப்பருப்பு உருண்டை*

தேவையானவை:– பாசிப்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், நெய் – 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப.

செய்முறை:  பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக பொடிக்கவும். பொடித்த மாவுடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யை சூடாக்கி இதனுடன் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *ரவை  தேங்காய் உருண்டை*

தேவையானவை:  ரவை – ஒரு கப், வறுத்த தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:  ரவையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். ரவை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதை ரவை கவலையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

 *அரிசி மிட்டாய் கலர்ஃபுல் உருண்டை*

தேவையானவை: அரிசி மிட்டாய் (சீரக மிட்டாய்) – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், வெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:  வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் சேர்க்க வும். உருண்டை பிடிக்க ஏற்ற பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். பாகு டன் அரிசி மிட்டாய், ரோஸ் எசன்ஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: பாகு சரியான பதம் வரும் முன் மிட்டாய் கொட்டி கலந்தால், மிட்டாய் கலர் கரைந்து களேபரம் ஆகிவிடும். சற்று கவனத்துடன் பாகு தயாரிக்கவும்.

 *அரிசிப் பொரி  கசகசா உருண்டை*

தேவையானவை:அரிசிப் பொரி – 100 கிராம், வறுத்த கசகசா – ஒரு டீஸ்பூன், பாகு வெல்லம் – 75 கிராம், நெய் – கால் டீஸ்பூன்

செய்முறை: அரிசிப் பொரி, வறுத்த கசகசாவை தாம்பளத்தில் கொட்டி, நெய் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தில் நீர்விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக் கவும். இதை பொரி கலவையில் கொட்டி, பெரிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

 *கமர்கட்*

தேவையானவை: துருவிய தேங்காய்  – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை: துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி நுரைக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எண் ணெய் சேர்க்கவும். கலவை நன்கு முற்றிய நிலையில் இறக்கி, சிறிய நெல்லி அளவு உருண்டைகள் பிடித்தால்… கிராமிய மணத்துடன் கலக் கல் கமர்கட் ரெடி!

 *வெள்ளை எள் உருண்டை*

தேவையானவை: வறுத்த வெள்ளை எள் – 100 கிராம், பாகு வெல்லம் – 75 கிராம், ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டைபிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். பாகுடன் ஏலக்காய்த்தூள், நெய், வறுத்த எள் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ஜவ்வரிசி  வெள்ளரி விதை உருண்டை*

தேவையானவை: முழு ஜவ்வரிசி (உடைந்தவற்றை நீக்கிவிடவும்) – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், வறுத்த வெள்ளரி விதை – 10 கிராம், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – இரண்டு சிட்டிகை, நெய் – எண்ணெய் கலவை – 200 கிராம்

செய்முறை:  நெய் – எண்ணெய் கலவையை சூடாக்கி, ஜவ்வரிசியை நிறம் மாறாது வெளுக்க பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளரி விதை சேர்க்கவும். வெல்லத் துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன் ஜவ்வரிசி கலவையை சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.

 *நெய் உருண்டை*

தேவையானவை: வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உள்ள கசண்டு – சிறிதளவு, அரிசி (அ) கோதுமை மாவு – சிறிதளவு, சர்க்கரை – சிறிதளவு.

செய்முறை: வெண்ணெய் காய்ச்சிய வாணலி / பாத்திரம் சூடாக இருக்கும்போது நெய்யை வடித்துவிட்டு மீதம் உள்ள கசண்டில், அரிசி (அ) கோதுமை மாவு மற்றும் சர்க்கரை (பொடிக்க வேண்டாம்) சேர்த்து, உருண்டை பிடிக்கவும்.

 *அவல்  டூட்டி ஃப்ரூட்டி உருண்டை*

தேவையானவை: தட்டை அவல் – ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி (இரண்டு வகை) – தலா 10 கிராம், பச்சைக் கற்பூரம் – சிறிதளவு, பொடித்த சர்க்கரை – அரை கப், நெய் – 150 கிராம்.

செய்முறை: அவலை வறுத்துப் பொடிக்கவும். நெய்யை சூடாக்கி… அதனுடன் பொடித்த அவல், டூட்டி ஃப்ரூட்டி, பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

 *உளுந்து மாவு உருண்டை*

தேவையானவை: முழு உளுந்து – 200 கிராம், சுக்குப்பொடி – அரை டீஸ் பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க் கரை – 150 கிராம், நெய் (அ) வனஸ்பதி – தேவைக்கேற்ப, வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.

செய்முறை: முழு உளுந்தை வறுத்து, மாவாக்கவும். அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். நெய் (அ) வனஸ்பதியை உருக்கி, உளுந்து மாவுக் கலவை மீது ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

இந்த ஸ்வீட் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும்.

 *கேழ்வரகு மாவு உருண்டை*

தேவையானவை: கேழ் வரகை சிவக்க வறுத்து, பொடியாக்கிய மாவு – ஒரு கப், வெல்லம் (அ) பொடித்த சர்க்கரை – அரை கப், ஏலக் காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் (வறுத்தது) – சிறிதளவு, நெய் – இரண்டு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் மற்றும் வெல்லம் (அ) சர்க் கரை சேர்த்து நன்கு பிசைந்து (கை சூட்டுக்கே இளகிவிடும்) உருண்டைகள் பிடிக்கவும்.

சத்தான, சுவையான இந்த உருண்டையை கேழ்வரகு பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 *பொரி விளங்காய் உருண்டை*

தேவையானவை: புழுங்கலரிசி – 100 கிராம், கோதுமை – 50 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு டீஸ்பூன், லவங்கம் – 5, சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கிய தேங்காய் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் – 200 கிராம், நெய் – சிறிதளவு.

செய்முறை: புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும். கோதுமை யையும் வறுத்து மாவாக்கவும். இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக் காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்த வுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்க வும். பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு புரட்டவும். கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டை களாக பிடிக்கவும்.

குறிப்பு: உருண்டை தளர இருப்பின், அந்த உருண்டை பிடிக்கும் மாவிலே ஒரு முறை புரட்டி எடுத்து செய்ய… உருண்டை சரியாக வரும். மாதக் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இதை வெறும் பல்லால் கடித்து சாப்பிடுவது கடினம். உடைத்துதான் சாப்பிட வேண்டும்.

 *பிரெட்  பனீர் உருண்டை*

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10 (ஓரம் நீக்கவும்), துருவிய பனீர் – 100 கிராம்,  உருளைக்கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை: துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து, பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

 *வேர்க்கடலை உருண்டை*

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – 2 கப், பாகு வெல்லம் – ஒன்றரை கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக் காய் எசென்ஸ் – சிறிதளவு.

செய்முறை: வெல்லத் தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்க வும். இந்தப் பாகுடன் வறுத்த வேர்க்கடலை, நெய், ஏலக் காய் எசென்ஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *மனோகரம் உருண்டை*

தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பாகு வெல்லம் – இரண்டே கால் கப், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் –  கால் கிலோ.

செய்முறை: உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, களைந்து உலர்த்திய பச்சரிசி யுடன் சேர்த்து மாவாக அரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, இந்த மாவை தேன் குழலாக பிழிந்து எடுத்து, நொறுக்கி… நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். இதை, பொடித்த தேன்குழல் மீது விட்டு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ரவை  வெஜிடபிள் உருண்டை*

தேவையானவை: ரவை – 200 கிராம் (வறுக்கவும்), துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், புதினா – கால் கட்டு (நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), உப்பு – சிறிதளவு.

செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 *அரிசி  கடலைப்பருப்பு உருண்டை*

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்), துருவிய இஞ்சி, மாங்காய் – சிறிதளவு, ஊற வைத்த கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் –  கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

 *பொட்டுக்கடலை உருண்டை*

தேவையானவை: பொட் டுக் கடலை – ஒரு கப், பாகு வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – சிறிதளவு.

செய்முறை:  வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக் கவும். பாகுடன் பொட்டுக் கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

 *ஸ்வீட் கார்ன்  தேங்காய் உருண்டை*

தேவையானவை: கொர கொரப்பாக அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது – ஒரு கப், வேக வைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, சீரகம் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், எண்ணெய் – 200 கிராம், சோள மாவு கரைசல் – சிறிதளவு (சோள மாவை சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்).

செய்முறை:  ஸ்வீட் கார்ன் விழுது, வேக வைத்த பச்சைப் பட்டாணி, சீரகம், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  இந்த உருண்டையை சோள மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

 *முப்பருப்பு உருண்டை*

தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், வெங்காயம் – 2 (நறுக்கவும்), கேரட் துருவல் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, கொத்தமல்லி – அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயம், உப்பு  – சிறிதளவு.

செய்முறை:  பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி ஊற விட்டு… உப்பு, மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் கேரட் துருவல், வெங்காயம் கலந்து பிசிறி, உருண்டைகளாக்கி, ஆவியில் 7-ல் இருந்து 10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 *அத்திப்பழம்  நட்ஸ் உருண்டை*

தேவையானவை: உலர்ந்த அத்திப்பழம் (நறுக்கியது) – கால் கப், உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை – தலா 2 டீஸ்பூன், ரூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம், நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 டீஸ்பூன், தேன் – சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகள் பிடிக்கவும்.

மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 *சர்க்கரைவள்ளிக் கிழங்கு உருண்டை*

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோ, தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்), பொடித்த வெல்லம் – 150 கிராம், முந்திரிப்பொடி – 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காய் துரு வலை சிவக்க வதக்கவும். சக் கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் வேகவிட்டு துருவிக்கொள்ளவும். இத்துடன் பொடித்த வெல்லம், முந்திரிப்பொடி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து உருட்டி, வதக்கிய தேங்காய் துருவலில் புரட்டி வைக்கவும். விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

 *பிஸ்கட்  கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை*

தேவையானவை: மாரி பிஸ்கட் – 10, கார்ன்ஃப்ளேக்ஸ் – அரை கப், பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள், நெய் – 4 டீஸ்பூன், மில்க் மெய்ட் – 5 டீஸ்பூன்.

செய்முறை: நெய்யை உருக்கவும். பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ், பொடித்த பிஸ்கட்டோடு… பிஸ்தா எசென்ஸ், மில்க்மெய்ட், உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குழந்தைகள் இதை  மீண்டும் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்.
நன்றி_அவள்_விகடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக