30 வகை நாட்டுப்புற சமையல்!
பச்சை மொச்சை காரக்குழம்பு
தேவையானவை: வேகவைத்த பச்சை மொச்சை 200 கிராம், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தக்காளி 4, சின்ன வெங்காயம் கால் கிலோ, பச்சை மிளகாய் 4, புளிக்கரைசல் அரை கப், உப்பு தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: பூண்டு 4 பல், சோம்பு அரை டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப், மிளகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: கடாய் அல்லது மண்சட்டியில் எண் ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, விழுதாக அரைக்கவும். மீண்டும் கடாய் (அ) மண் சட்டியை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கொஞ்சம் கொதித்து வருகையில் வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது.
சேமியா தேங்காய் இனிப்பு பொங்கல்
தேவையானவை: வேகவைத்து, நீரை வடித்த சேமியா ஒரு கப், தேங்காய்த் துருவல் கால் கப், வெல்லப்பாகு ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப், நெய் 150 கிராம், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை.
செய்முறை: சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். அதனுடன் வெல்லப்பாகு. வெந்த சேமியா, வேகவைத்த பாசிப்பருப்பு, கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறி, சற்று தளர இருக்கையில் இறக்கி… வறுத்த முந்திரி திராட்சை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, இளம் சூட்டில் பரிமாறவும்.
அகத்திக்கீரை பொங்கல்
தேவையானவை: ஆய்ந்து, அலசி, நறுக்கிய அகத்திக்கீரை ஒரு கப், பச்சரிசி 200 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), சீரகம், பொடித்த மிளகு தலா அரை டீஸ்பூன், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப் பருப்பைக் கழுவி மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்க்கவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் நீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய்யைக் காயவிட்டு… பொடித்த மிளகு, சீரகம் தாளித்து, அகத்திக்கீரை சேர்த்துக் கிளறி… அரிசி, பருப்பை நீருடன் ஊற்றி குக்கரை மூடி, 4 (அ) 5 விசில் விட்டு இறக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, விருப்பப்பட்டால் மேலும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.
ஏகாதசி விரதம் முடித்து, துவாதசியன்று சாப்பிடும் உணவில் இது இடம் பெறும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு சிறந்த நிவாரணி இது.
பனங்கல்கண்டு ரவை பொங்கல்
தேவையானவை: வறுத்த ரவை 200 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், பனங்கல்கண்டு 400 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், நெய் 100 கிராம், ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்.
செய்முறை: பனங்கல்கண்டில் கால் கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். நெய்யில் ரவையை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு, வறுத்த ரவை மற்றும் வடிகட்டிய பனங்கல்கண்டு பாகு சேர்க்கவும். வெந்து வருகையில் இறக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
சேமியா மிளகு பொங்கல்
தேவையானவை: வேகவைத்த சேமியா ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப், கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), நெய் 100 கிராம், மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
தாளிக்க: முந்திரி 25 கிராம், மிளகு (பொடித்தது), சீரகம் தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்.
செய்முறை: வேகவைத்த பாசிபருப்பு, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், வேகவைத்த சேமியா ஆகியவற்றை வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு மேலும் கிளறவும். பிறகு இறக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். புதினா, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
புதினா மிளகு துவையல்
தேவையானவை: ஆய்ந்து, அலசிய புதினா ஒரு கப், மிளகு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, தோலுடன் கூடிய உடைத்த கறுப்பு உளுந்து 2 டேபிள்ஸ்பூன், பூண்டு 2 பல், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி… உப்பு, புளி தவிர மற்ற பொருட்களை சிவக்க வறுக்கவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
இதை கஞ்சி, சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், அசத்தலான சுவையில் இருக்கும்.
சிவப்பு பூசணி துவையல்
தேவையானவை: சிவப்பு பூசணி கால் கிலோ (தோல் சீவி, துருவி, வதக்கவும்), தேங்காய் அரை மூடி (துருவிக்கொள்ளவும்), மஞ்சள்தூள் சிறிதளவு, புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.
வறுத்துக்கொள்ள: உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 10, பூண்டு 2 பல், எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து… புளி, உப்பு, மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், பூசணி துருவல் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அரைத்து எடுக்கவும் (சிறிய துண்டு வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். பூண்டு தேவை இல்லை என்றால் நீக்கிவிடவும்).
நாட்டுக்காய் கதம்ப சாம்பார்
தேவையானவை: கத்திரிக்காய், வாழைக்காய் வெள்ளைப் பூசணி துண்டுகள் (சேர்த்து) 2 கப், தக்காளி 2 (நறுக்கவும்), புளிக்கரைசல் கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு 100 கிராம் (மசிக்கவும்), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 100 கிராம் (நறுக்கவும்), கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: காய்ந்த மிளகாய் 2, கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளிக்கரைசலில் மேலும் அரை கப் நீர் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேகவிடவும். சின்ன வெங்காயம், தக்காளியை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். சாம்பார் பொடியையும் சேர்க்கவும். மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் விட்டு விளாவி இதில் சேர்த்துக் கொதிக்க விடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, இதனுடன் சேர்த்து இறக்கி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.
இடித்த இஞ்சி ரசம்
தேவையானவை: நாட்டுத் தக்காளி 2, இஞ்சி ஒரு இஞ்ச் அளவு துண்டு, பருப்பு நீர் 2 கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவிட்டு, தண்ணீர்விட்டு கரைக்கவும்), மஞ்சள்தூள், புளி சிறிதளவு, பூண்டு 2 பல், சீரகம் அரை டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறுகட்டி (தூளாக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு சிறிதளவு, நெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கவும். இஞ்சியை இடித்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை அம்மி (அ) உரலில் நசுக்கிக்கொள்ளவும் (மிக்ஸியிலும் பொடிக்கலாம்). மண்சட்டி அல்லது வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, வதங்கியபின் புளி, உப்பு, பருப்பு நீர் சேர்க்கவும். நசுக்கிய பூண்டு சீரகம் மிளகு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
இது இருமலைத் தணிக்க உதவும்.
111
கேப்பை தோசை
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு 250 கிராம், அரிசி மாவு 50 கிராம், உளுத்தம்பருப்பு 50 கிராம், பச்சை மிளகாய் 3, சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை கால் கட்டு, எண்ணெய் 50 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் கேப்பை மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 5 (அ) 6 மணி நேரத்துக்குப் பிறகு தோசை சுடவும். 5, 6 மணி நேரம் புளிக்க வைக்க முடியா விட்டால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கரைத்து உடனடியாக தோசை வார்க்கலாம்.
தினை கம்பு அடை
தேவையானவை: தினை, கம்பு, பச்சரிசி தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா கால் கப், காய்ந்த மிளகாய் 10, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் கால் கப், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு, எண்ணெய் 100 மில்லி.
செய்முறை: தினை கம்பு, அரிசி ஆகியவற்றை மெஷினில் கொடுத்து ரவையாக பொடிக்கவும். இதை உப்பு கலந்த நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறவிட்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும் இத்துடன் ஊறிய தினை கம்பு அரிசி கலவை, நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்வும்.
இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி குறையும்.
கேப்பை இனிப்பு பணியாரம்
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு ஒரு கப், அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, சோடா உப்பு தலா அரை சிட்டிகை, தேங்காய்த் துருவல் கால் கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, கரைத்த வெல்ல நீர் ஒரு கப் (200 கிராம் வெல்லம் போதுமானது), நெய் எண்ணெய் கலவை 100 கிராம்.
செய்முறை: மாவு வகைகளுடன் உப்பு, சோடா உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்ல நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். பணியாரக் கல்லில் சிறிதளவு நெய் எண்ணெய் கலவையை விட்டு, முக்கால் பாகத்துக்கு கரைத்த மாவு நிரப்பி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
தேவையானவை: தோல் சீவி நறுக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு கால் கிலோ, பொடித்த வெல்லம் 2 டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெல்லம் சேர்த்து இளகவிடவும். வேகவைத்த வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி எடுக்கவும்.
இதை மண்சட்டியில் செய்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.
அவல் இனிப்பு பொங்கல்
தேவையானவை: கெட்டி அவல் 200 கிராம் (10 நிமிடம் ஊறவிடவும்), வேகவைத்த பாசிப்பருப்பு 100 கிராம், பாகு வெல்லம் 250 கிராம் (கரைத்து வடிகட்டவும்), நெய் 100 கிராம், குங்குமப்பூ சில இதழ்கள், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள் தலா 2 டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
செய்முறை: வேகவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசல், நெய் ஊற்றி நன்கு கிளறவும். கெட்டியாகும்போது, ஊறவைத்த அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும் (அதிக நேரம் கிளற வேண்டாம். அவல் சிதைந்துவிடும்). இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு இஞ்சிக் கடைசல்
தேவையானவை: பாசிப்பருப்பு 200 கிராம், துருவிய இளம் இஞ்சி ஒரு டீஸ்பூன், நாட்டுப் பூண்டு 4 பல் (நசுக்கவும்), நாட்டுத்தக்காளி 4 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை சிறிதளவு, பச்சை மிளகாய் 4 (இடிக்கவும்), காய்ந்த மிளகாய் 2, கடுகு, மஞ்சள்தூள் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை அகலமான மண் சட்டியில் மலர வேகவிடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மத்தால் நன்கு கடையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். நசுக்கிய பூண்டு, துருவிய இளம் இஞ்சி, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, பருப்புக் கடைசலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தினை தேன் புட்டு
தேவையானவை: தினை மாவு (கடைகளில் ரெடிமேட் ஆகவும் கிடைக்கிறது) 200 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப், தேன் 100 மில்லி, உப்பு ஒரு சிட்டிகை.
செய்முறை: தினை மாவில் உப்பு கலந்த சுடுநீர் தெளித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் உதிர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் விட்டு பிசிறி பரிமாறவும்.
சேனை பொரியல்
தேவையானவை: சேனைக்கிழங்கு கால் கிலோ, இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், புளி விழுது ஒரு டீஸ்பூன், எண்ணெய் 100 கிராம், உப்பு தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, சதுரமாக நறுக்கி… உப்பு, புளி விழுது கலந்த நீரில் சேர்த்து, அரைவேக்காடு பதத்தில் வேகவிட்டு நீரை வடிக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை நன்கு குழைத்து, சேனைக்கிழங்கு சதுரங்களின் மீது மேலும் கீழும் பூசி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
மேலே மொறுமொறுப்பாக, உள்ளே மிருதுவாக அசத்தும் இந்தப் பொரியல்.
இனிப்பு பால் பொங்கல்
தேவையானவை: புதிய பச்சரிசி 200 கிராம், பால் 600 மில்லி, சர்க்கரை 300 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு, நெய் 100 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அடிகனமான, பெரிய பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து பாதி குழைந்தபின் சர்க்கரை, நெய் சேர்க்கவும். அடிபிடிக்காமல் கவனமாக கிளறவும். பால் அரிசி கலவை நன்கு சுண்டி வருகையில் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
அவரைக்காய் வேர்க்கடலை கூட்டு
தேவையானவை: அவரைக்காய் 250 கிராம், பச்சை வேர்க்கடலை 100 கிராம் (உப்பு சேர்த்து வேகவிடவும்), தேங்காய் ஒரு மூடி, சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 8, தக்காளி 2, பூண்டு 2 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு சிறிதளவு.
செய்முறை: தேங்காய், சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி… மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் (அ) மண்சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்த வேர்க்கடலை, அவரைக்காய் சேர்த்து நன்கு கொதித்தபின் இறக்கவும்.
புளி சேர்க்காத இந்த கூட்டு, சுவையில் அசத்தும்.
பச்சைத் துவரை துவட்டல்
தேவையானவை: பச்சைத் துவரை (உரித்தது) 200 கிராம், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் (நறுக்கியது) கால் கப், பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், நறுக்கிய புதினா ஒரு கைப்பிடி அளவு, கடுகு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சைத் துவரையை உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து, வெந்த பச்சை துவரையையும் சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை மாவு தூவி இறக்கவும்.
குறிப்பு: இந்த சீஸனில் பச்சை துவரைக் காய் நிறைய காய்கறி கடைகளில் கிடைக்கும்.
பிஞ்சு மக்காச்சோள பிரட்டல்
தேவையானவை: பிஞ்சு மக்காச்சோளம் (ஒரு இஞ்ச் அளவுக்கு நறுக்கியது) 20 துண்டுகள், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்க வும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளற வும். பிறகு, சோளப்பிஞ்சை சேர்த்து சிறிது நீர் தெளித்து வேக விடவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.
கல்கண்டு பொங்கல்
தேவையானவை: சிறிய கல்கண்டு (டைமண்ட் கல்கண்டு) 200 கிராம், பச்சரிசி 100 கிராம், பாசிப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு, ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து, குழைய வேகவிடவும். இதில் கல்கண்டு சேர்க்கவும். சிறிது நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, நெய் விட்டு நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி, ஆறியபின் பரிமாறவும்.
கேப்பை வெல்ல அல்வா
தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு 100 கிராம், வெல்லம் 200 கிராம், நெய் 50 கிராம், எண்ணெய் 50 மில்லி, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். கலவை கெட்டியாகும்போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும்.
இதை அப்படியே பரிமாறலாம். வில்லை களாக்கியும் சாப்பிடலாம்.
வெள்ளைச் சோள மாவு ரொட்டி
தேவையானவை: வெள்ளைச் சோள மாவு 200 கிராம் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, வெங்காயம் ஒன்று, உப்பு சிறிதளவு, எண்ணெய் 50 கிராம்.
செய்முறை: வெள்ளைச் சோள மாவு. மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது சுடு நீர் தெளித்து ரொட்டி (சப்பாத்தி) மாவு மாதிரி பிசையவும். கையில் எண்ணெய் தடவி சாத்துக்குடி அளவு மாவு எடுத்து உருட்டவும். இதை எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியைப் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
இதைச் சூடாக சாப்பிட வேண்டும்.
மக்காச்சோள சுண்டல்
தேவையானவை: வேகவைத்து உதிர்த்த நாட்டு மக்காச்சோளம் ஒரு கப், பூண்டு 2 பல் (நசுக்கவும்), காய்ந்த மிளகாய் 2, நறுக்கிய சின்ன வெங்காயம் கால் கப், கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி… உப்பு, உதிர்த்த சோளமணிகள் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.
பூண்டு சீரகத் துவையல்
தேவையானவை: நாட்டுப் பூண்டு (உரித்தது) 10 பல், சீரகம் ஒரு டீஸ்பூன், தக்காளி 2, காய்ந்த மிளகாய் 6, துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
தாளிக்க: சமையல் எண்ணெய் ஒரு டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு.
செய்முறை: சிறிதளவு எண்ணெயில் பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்துக் கலக்கவும்.
அவல் காரப்பொங்கல்
தேவையானவை: அவல் 200 கிராம் (ஊறவைக்கவும்), வேகவைத்த பாசிப்பருப்பு 100 கிராம், கீறிய பச்சை மிளகாய் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகு சிறிதளவு, பெருங்காயம் ஒரு சிறு கட்டி (தூளாக்கவும்), கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு சீரகம், பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு, ஊறவைத்த அவல் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, அவல் சிதையா வண்ணம் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சிவப்பு அவலிலும் செய்யலாம். ருசி மேலும் பிரமாதமாக இருக்கும்.
கீரை தக்காளி தாளிதம்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), தக்காளி ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு 2 டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் 2, கடுகு, பெருங்காயம் (தூளாக்கவும்) சிறிதளவு, பூண்டு 2 பல் (நசுக்கவும்), எண்ணெய் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு.
செய்முறை: மண்சட்டி (அ) கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பூண்டு தாளிக்கவும். இத்துடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கீரை, தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கீரை தக்காளி பாதி வெந்தவுடன் பருப்பு சேர்த்து, மேலும் வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது கெட்டியாகத்தான் இருக்க வேண்டும்.
மல்லி சாதம்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப் (நன்கு ஆறவிடவும்).
வறுத்துப் பொடிக்க: மல்லி விதை (தனியா) 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறு கட்டி, நல்லெண்ணெய் 50 கிராம், புளி சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: வறுக்க கொடுத்த பொருட்களை (புளி, உப்பு தவிர) வெறும் கடாயில் சிவக்க வறுத்து, உப்பு, புளி சேர்த்து பொடியாக்கவும். நல்லெண்ணெயை நன்கு பொங்க காய்ச்சி, சாதத்தின் மேல் ஊற்றி, அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். சுட்ட அப்பளம் அல்லது பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.
நீராகாரம்
தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி ஒரு கப், சிலுப்பிய தயிர் அரை கப், முதல் நாள் இரவு வடித்த சாதத்தின் மீது ஊற்றிய நீர் ஒரு கப் (சாதத்தை நன்கு கிளறி அது மூழ்கும் வரை நீர் விடவும்), உப்பு தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (வெங்காயம் தவிர) நன்கு கலந்து விளாவி, வெங்காயம் தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், பச்சை மிளகாயை கடித்துக்கொண்டு நீராகத்தை பருகலாம். இது கிராமத்தினர் பலரின் வழக்கம்.
நன்றி:-.vikatan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக