சிறுதானிய லஞ்ச் ஸ்பெஷல்
🔘பனிவரகு மஷ்ரூம் புலாவ்
🔘 வரகு வெஜ் பனீர் ஊத்தப்பம்
🔘 தினை பனீர் காட்டி ரோல்ஸ்
🔘 சென்னா-முட்டைகோஸ் புலாவ்
🔘 முள்ளங்கி-பட்டாணி பாத்
🔘 ராகி சேவை-வெஜ் சாலட்
🔘 குதிரைவாலி மசாலா இட்லி
🔘 கேப்சிகம் பாத்
🔘 மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்
🔘 சிவப்பு அவல் வெஜ் உப்புமா
சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.
பனிவரகு மஷ்ரூம் புலாவ்
தேவையானவை:
பனிவரகு - 200 கிராம்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய்ப்பால் - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பனிவரகை சுத்தம் செய்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். மஷ்ரூமை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கவும், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பாதியளவு கொத்தமல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் மஷ்ரூம், தேங்காய்ப்பால், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும், பனிவரகைச் சேர்த்துக் கலக்கி, மீண்டும் ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்திருந்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து, மீதமுள்ள புதினா, கொத்தமல்லித்தழை தூவி லேசாக கிளறிப் பரிமாறவும். இதற்கு புதினா அல்லது கொத்தமல்லித் துவையல், சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு:
புலாவை குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பாக்சில் வைத்தால், நீண்ட நேரம் உதிரியாக இருக்கும். ஒரு கப் அரிசி எடுத்தால், இரண்டரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தக்காளியும், மஷ்ரூமும் தண்ணீர் விடுமென்பதால், இரண்டரை கப் போதும். தேங்காய்ப்பால் சேர்த்துதான் இரண்டரை கப் என்பதை மறக்க வேண்டாம்.
வரகு வெஜ் பனீர் ஊத்தப்பம்
தேவையானவை:
வரகு இட்லி மாவு - 4 கப்
துருவிய கேரட், பனீர்,
முட்டைகோஸ் கலவை - 2 கப்
பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் காய்கறி மற்றும் பனீர் கலவை, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சித்துருவல், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் வரகு இட்லி மாவில் உப்பு சேர்த்துக் (மாவில் உப்பு போட்டிருந்தால் உப்பு சேர்க்க வேண்டாம்) கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவெடுத்து ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். கார சட்னியுடன் சாப்பிடவும். காய்கறிக்குப் பதில் கீரையை பச்சையாக சேர்க்கலாம். ஊத்தப்பம் வேகும் சூட்டிலேயே கீரை வெந்துவிடும்.
மதிய உணவுக்கு ஏற்றது. குறிப்பாக, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. டிபன் பாக்ஸில் வைக்கும்போது, ஊத்தப்பம் மேலே லேசாக நல்லெண்ணெய் தடவி வைக்கவும்.
தினை பனீர் காட்டி ரோல்ஸ்
தேவையானவை:
தினை மாவு - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பனீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பிறகு மாவை உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதனுடன் துருவிய பனீர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். சப்பாத்தியின் மீது சிறிது நெய் தடவி பனீர் மசாலாவை உள்ளே வைத்து சுற்றவும். டிபன் பாக்ஸில் வைத்து, மேலே லேசாக நெய் தடவி வைத்தால், மதியம் சாப்பிட அருமையாக இருக்கும்.
சென்னா-முட்டைகோஸ் புலாவ்
தேவையானவை:
பாசுமதி (அ) சீரக சம்பா அரிசி - 2 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை - அரை கப்
துருவிய முட்டைகோஸ் - அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய், நெய் சேர்க்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், கீறிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய முட்டைகோஸ், கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரிசியை சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடவும். பிரஷர் குக்கரில் விசில் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கிளறவும். தயிர்ப்பச்சடி அல்லது சிப்ஸுடன் பரிமாறவும். புரதச்சத்து நிறைந்த புலாவ்.
முள்ளங்கி-பட்டாணி பாத்
தேவையானவை:
வடித்த சாதம் - 2 கப்
முள்ளங்கி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 100 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை - கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பாதியளவு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற கரைய வதக்கி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். மிக்ஸியில் சோம்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து வெங்காயம் தக்காளிக் கலவையில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு துருவிய முள்ளங்கி, மஞ்சள்தூள், வேக வைத்த பச்சைப்பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
காய்கறி நன்கு வதங்கியதும், வடித்த சாதம், நெய், மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறினால், முள்ளங்கி-பட்டாணி பாத் தயார். சிப்ஸ் அல்லது கொத்தமல்லித்தழை, புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவுக்கு ஏற்றது.
ராகி சேவை-வெஜ் சாலட்
தேவையானவை:
ராகி சேவை - ஒரு பாக்கெட்
நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - ஒரு கப்
புராக்கோலி - 10 பூக்கள்
வெள்ளரித் துண்டுகள் - கால் கப்
வேக வைத்த முளைக்கட்டிய பயறு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
ராகி சேவையை சுடுநீரீல் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வைத்திருந்து எடுத்து விடவும். நீரை வடித்து விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியே வைக்கவும். புரோக்கோலி பூக்களைப் பிரித்து உப்பு நீரில் போட்டு எடுக்கவும். காய்கறிகளை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிய பாட்டிலில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, சீரகத்தூள், எண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். இனி பெரிய பாத்திரத்தில் காய்கறிகள், பயறு, புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு, கலவையை ஊற்றிக் குலுக்கவும். 10 நிமிடம் கழித்து சாப்பிடவும். விருப்பப்பட்டால், மிக்ஸ்டு ஹெர்பஸ் சேர்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள், மதிய உணவுக்கு இப்படி செய்து சாப்பிடலாம்.
குதிரைவாலி மசாலா இட்லி
தேவையானவை:
குதிரைவாலி இட்லி மாவு - 4 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல் (அரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
செய்முறை:
சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் விழுது, புதினா, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, பாதி அளவு இட்லி மாவை ஊற்றவும். மேலே உருளைக்கிழங்கு மசாலா வைத்து மேலே மீண்டும் மாவு ஊற்றவும். ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால், குதிரைவாலி மசாலா இட்லி ரெடி. சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கேப்சிகம் பாத்
தேவையானவை:
வேக வைத்த சாதம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
புளிக்கரைசல் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
குடமிளகாய் - 2
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு,
சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், வேர்க்கடலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். கரைசல் நன்கு கொதித்ததும், புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இந்தக் கலவையை வேகவைத்த சாதத்தில் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறவும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய குடமிளகாயில் அருமையான சாதம் தயார்.
மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்
தேவையானவை:
சீரகசம்பா அரிசி - 2 கப்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 3
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
பிரிஞ்சி இலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 3
தேங்காய்ப்பால் - 2 கப்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கீரையை சுத்தம் செய்யவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற வதக்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், கீரை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால் 2 கப், தண்ணீர் இரண்டு கப் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து ஊற வைத்த அரிசியையும் சேர்த்துக் கிளறவும். கொதி வந்ததும் குக்கரை மூடி, தீயை சிம்மில் 7 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து அரை டீஸ்பூன் நெய் விட்டு கிளறிப் பரிமாறவும்.
சிவப்பு அவல் வெஜ் உப்புமா
தேவையானவை:
சிவப்பு கெட்டி அவல் - 2 கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், முளைக்கட்டிய பயறு கலவை - 2 கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, கடலைப்பருப்பு உளுந்து - தலா கால் டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும். காய்கறிகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த காய்கறிகள் முளைக்கட்டிய பயறு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, எலுமிச்சைச் சாறு, தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கிளறவும். சத்தான அவல் உப்புமா ரெடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக