திங்கள், 29 ஜூலை, 2019

30 வகை சூப்பர் ரெசிபி


30 வகை சூப்பர் ரெசிபி

”பிரச்னைக்குத் தீர்வு… சரியான உணவு, தேவையான உடற்பயிற்சி இவற்றில்தான் இருக்கிறது” என்பதுதான் டாக்டர்களின் ஏகமனதான அட்வைஸ்!

‘சுகர் பிராப்ளம்’ வராமலிருக்க… பிரச்னை வரும் நிலையில் இருந்தால், தடுத்து நிறுத்த… ஏற்கெனவே வந்திருந்தால், கட்டுக்குள் வைத்திருக்க… 30 வகை ‘சூப்பர் ரெசிபி’களை உங்களுக்கு பரிவுடன் பரிந்துரைக்கிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

”சோயாபீன்ஸ், ஓட்ஸ், வேப்பம்பூ, நெல்லிக்காய், கீரை போன்றவற்றை பயன்படுத்தி சுவையான, சத்துமிக்க அயிட்டங்களை கொடுத்துள்ளேன். செய்து பாருங்கள்… குடும்ப நலம் பேணுங்கள்” என்று அழைப்பு விடுக்கும் தீபாவின் ரெசிபிகளை, கண்கவரும் விதத்தில் அலங்கரித்துஇருக்கிறார் ‘செஃப்’ ரஜினி.

டில் கிரீன்ஸ் பாத்

தேவையானவை: கோதுமை ரவை: ஒரு கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சிறியது), கேரட் துருவல், கோஸ் துருவல் – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, எண்ணெய், கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையானஅளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கீரை, கேரட், கோஸ் துருவலை சேர்த்து வதக்கவும். பிறகு, இரண்டு கப் தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் உப்பு, கோதுமை ரவையை சேர்த்து நன்கு வேகவிட்டு கிளறி இறக்கவும்.

வெள்ளரி பிசிறல்

தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று, பயத்தம்பருப்பு – அரை கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, கடுகு, பெருங்காயம், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரியை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பயத்தம்பருப்பை மலர வேகவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், வெள்ளரி சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, வெந்த பயத்தம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

முளை தானிய சுண்டல்

தேவையானவை: கோதுமை – ஒரு கப், பச்சைப் பயறு, கொண்டைக்கடலை – தலா கால் கப், வெங்காயம் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் கோதுமையை ஊறவிட்டு மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும் (முளைக்க இரண்டு நாட்கள் ஆகும்). அன்றைய தினம் பச்சைப் பயறு, கொண்டைக் கடலையை ஊற வைத்து மறுநாள் முளை கட்டவும்.

மூன்றாவது நாள், முளைத்த அனைத்து தானிய வகைகளை வேகவிடவும். பின்பு, ஒரு அடி கனமான கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… உப்பு, முளை கட்டிய தானியங்கள் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

இது ஒரு ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி.

வேப்பம்பூ குழம்பு

தேவையானவை: வேப்பம்பூ – 50 கிராம், புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், வெல்லம், கடுகு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேப்பம்பூ சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, சாம்பார் பொடி, வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, கெட்டி குழம்பாக இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்.

இது, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.

கோதுமை புட்டு

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சம் பழம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவை வெறும் கடாயில் வறுக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிடவும். வெந்த பின் புட்டு போல உதிர்ந்துவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து… ஆவியில் வெந்த கோதுமை புட்டு சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், தாளிக்கும்போது சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

கோவைக்காய் ரைஸ்

தேவையானவை: கோவைக்காய் – 100 கிராம், வடித்த சாதம் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை ஆவியில் வேகவிடவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆவியில் வேக வைத்த கோவைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காய கலவையுடன் சேர்த்துக் கிளறி, நன்கு வதக்கி, இறக்கும் முன் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

வீட் பால்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – 4 டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து… உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கிளறி இறக்கி, பச்சரிசி மாவை மேலே தூவி பிசிறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு உருண்டைகளை சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பச்சை மோர்க்குழம்பு

தேவையானவை: புளிக்காத மோர் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மோருடன் உப்பு சேர்த்துக் கலக்கி… அரைத்த விழுது, மல்லித்தழை சேர்த்து பயன்படுத்தலாம்.

இதை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கியும் பயன்படுத்தலாம்.

அடைக்கு ஏற்ற சூப்பரான சைட் டிஷ் இது!

வெந்தயக்கீரை ரசம்

தேவையானவை: வெந்தயக்கீரை – ஒரு சிறு கட்டு, அருகம்புல் பொடி (விருப்பப்பட்டால்) – ஒரு டீஸ்பூன், தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 3, மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக் கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்கவிடவும். வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை, அருகம்புல் பொடி சேர்த்து… கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும். மிளகு – சீரகத் தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கிப் பரிமாறலாம்.

ஆரஞ்சு தோல் கொத்சு குழம்பு

தேவையானவை: ஆரஞ்சு பழத் தோல் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது), புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு, வெந்தயப் பொடி, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… வெந்தயப் பொடி, சாம்பார் பொடி சேர்த்து, ஆரஞ்சு தோலையும் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை மிளகாய், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்த்து நன்கு கொதித்த பின்பு இறக்கவும்.

கோவைக்காய் துவையல்

தேவையானவை: கோவைக்காய் – 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்), உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை சுத்தம் செய்து, மெல்லிய சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். பின்பு அதே எண்ணெயில் கோவைக்காயை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேகும் வரை வதக்கவும். புளியை சேர்த்து ஒரு முறை புரட்டி எடுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்த்தால்… கோவைக்காய் துவையல் ரெடி!

கோதுமை அடை

தேவையானவை: கோதுமை – ஒரு கப், அரிசி – அரை கப், துவரம்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – சிறிதளவு, கடலைப்பருப்பு – கால் கப், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய் – உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் ஊற வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து… பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரவென அரைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பச்சைப் பயறு துவையல்

தேவையானவை: பச்சைப் பயறு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறை ஊற வைத்து வேகவிடவும். இதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்து இதனுடன் சேர்த்தால்… ஹெல்தி யான பயறு துவையல் தயார்.

ஸ்டஃப்டு கோவைக்காய்

தேவையானவை: கோவைக்காய் – 100 கிராம், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை கழுவி துடைத்து நான்காக ( ) போல பிளந்து வைக்கவும் (முழுவதும் வெட்டிவிட வேண்டாம்). பின்பு, ஆவியில் சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடா யில் வறுத்துப் பொடிக்கவும். வெந்த கோவைக்காயின் நடுவே இந்த பொடியை அடைக்கவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளித்து, ஸ்டஃப் செய்யப்பட கோவைக்காயை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விட்டு, உப்பு தூவிக் கிளறி, சுருள வதக்கி இறக்கவும்.

குறிப்பு: கிரீன் சட்னியை ஸ்டஃப் செய்தும் இதை செய்யலாம்.

ஹை புரோட்டீன் சாலட்

தேவையானவை: கொண்டைக்கடலை, பச்சைப் பயறு – தலா 50 கிராம், முள்ளங்கி, தக்காளி – தலா ஒன்று, கோஸ் துருவல், வெந்தயக்கீரை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலை, பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும். இதனுடன் முள்ளங்கி துருவல், கோஸ் துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி, ஊற வைத்து சாப்பிடலாம்.

அவரை கடலை உசிலி

தேவையானவை: அவரைக்காய் – 100 கிராம், பச்சை வேர்க்கடலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 4, கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவரைக்காயை சுத்தம் செய்து, ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுக்கவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய அவரையை சேர்த்து வதக்கி… உப்பு, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த பின் வேர்க்கடலை – மிளகாய் பொடியை தூவிக் கிளறி இறக்கவும்.

ராகி சேவை உப்புமா

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் ராகி மாவை வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதனுடன் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீர் விட்டு பிசைந்து இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆவியில் வேக வைத்த ராகி சேவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் காய் கறிகள் சேர்த்து வதக்கலாம்.

ராகி சட்னி கஞ்சி

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், வெங்காயம் (அ) தக்காளி சட்னி – 4 டீஸ்பூன், உப்பு, மோர் – தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கஞ்சி காய்ச்சவும். இதனுடன் உப்பு, சட்னி சேர்த்துக் கலக்கி இறக்கவும். ஆறிய பின் தேவையான அளவு நீர் மோர் சேர்த்தால்… வாசனையான, ஆரோக்கியமான கஞ்சி ரெடி!

ஓட்ஸ் பகாளாபாத்

தேவையானவை: ஓட்ஸ், தயிர் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து… இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கொதி வந்த பின் ஓட்ஸ், உப்பு சேர்த்துக் கிளறி, வேக விட்டு இறக்கவும்.

ஆறிய பின் தயிருடன் கலந்து சாப்பிட்டால்…. சூப்பர் சுவையில் இருக்கும்.

சுரைக்காய் பச்சடி

தேவையானவை: சுரைக்காய் – 100 கிராம், தயிர் – ஒரு கப், எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி துருவவும். தயிரை கெட்டியாகக் கடையவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, தயிரில் சேர்த்துக் கலக்கவும். பின்பு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சுரைக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய சுரைக்காய் கலவையை தயிருடன் கலக்க… சுவையான சுரைக்காய் பச்சடி ரெடி!

தானியம் கீரை தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், ஓட்ஸ் – அரை கப், முருங்கைக்கீரை – ஒரு கப், கறிவேப்பிலை, சீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸ் மற்றும் மாவு வகைகளை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதனுடன் உப்பு, சீரகம், கறிவேப்பிலை, சுத்தம் செய்த முருங்கைக்கீரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து, தோசைக்கல்லை சூடாக்கி, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

கோதுமை மோர்க்கூழ்

தேவையானவை: கோதுமை மாவு, மோர் – தலா ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். ஆறிய பின் இதனுடன் கரைத்த மோர், உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து… கரைத்த மாவை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்துக் கிளறவும். மாவு நன்கு வெந்து, கூழாக வந்ததும் பரிமாறலாம்.

மிகவும் சுவையான, பாரம்பரியமான உணவு இது!

நெல்லிக்காய் பொரியல்

தேவையானவை: நெல்லிக்காய் – 10, இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தாளிக்க தேவையான அளவு, மல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயின் விதைகளை நீக்கி, ஆவியில் வேக விடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து… வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு, இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கினால்.. வைட்டமின் ‘சி’ நிறைந்த ஹெல்தியான பொரியல் ரெடி! இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

பப்பாளி காய் சூப்

தேவையானவை: பப்பாளி காய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பப்பாளியை தோல் சீவி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கேரட் துருவியில் துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய பப்பாளி காயை சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின் நைஸாக அரைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி சூடாக பரிமாறலாம்.

கீரை ஆம்லெட்

தேவையானவை: கீரை (ஏதாவது ஒரு வகை) – அரை கப், கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – கால் கப், வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, தயிர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, ஏதாவது ஒரு வகை கீரை (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) சேர்த்துக் கரைக்கவும். இந்த மாவை தோசைக்கல்லில் ஆம்லெட் போல வார்த்து எண்ணெய் விட்டு வேக விட்டு எடுக்க… சத்தான கீரை ஆம்லெட் ரெடி!

பூசணி மோர் கூட்டு

தேவையானவை: தோல் சீவி நறுக்கிய பூசணி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடைந்த தயிர் – ஒரு கப், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் சீவிய பூசணி துண்டுகளை, வேக விடவும். உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். வெந்த பூசணிக்காயுடன் உப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து பூசணிக் கலவையில் சேர்த்து, கடைந்த தயிரை விட்டு கிளறி இறக்கவும்.

ராகி மேத்தி பக்கோடா

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, வெந்தயக்கீரை – ஒரு சிறிய கட்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து ஆய்ந்த வெந்தயக்கீரை, சீரகம், கறிவேப்பிலை, மல்லிதழை சேர்த்துப் பிசிறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

புடலை புட்டு

தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, பொட்டுக்கடலை – 5 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெங்காயம் – ஒன்று, எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு, மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புடலைங்காயை கழுவி மெல்லிய வளையங்களாக நறுக்கவும். பொட்டுக்கடலையுடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு கடுகு தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய புடலை, மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து வேகவிடவும். உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சோயா பால் கஞ்சி

தேவையானவை: சோயா பீன்ஸ், கோதுமை – தலா 50 கிராம், வெந்தயப்பொடி (விரும்பினால்) – ஒரு சிட்டிகை, காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை (சுகர் ப்ரீ) – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸ், கோதுமையை தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். இதனுடன் வெந்தயப் பொடி சேர்த்து வைத்துக் கொள்ளவும். கஞ்சி தேவைப்படும்போது, ஒரு டீஸ்பூன் பவுடரை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, சுகர் ப்ரீ மாத்திரை அல்லது பவுடர் மற்றும் பால் கலந்து பருகவும்.

இந்த கஞ்சியைப் பருகினால், நீரழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் தளர்ச்சி சீராகும்.

முளைப்பயறு குருமா

தேவையானவை: பச்சைப் பயறு – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பெருங்காயத்தூள், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறை முதல் நாளே ஊற வைத்து, மறு நாள் மெல்லிய துணியில் முளை கட்டவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முளை கட்டிய பச்சைப் பயறை வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து… பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த பயறை சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, குருமா பதத்தில் இறக்கவும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக